Wednesday, December 10, 2008

அனைத்திலும் உதாரணமாய் ஒரு தலைவன்

சூப்பர் ஸ்டாரின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு புலப்படும். அவர் அனைத்து விஷயங்களிலும் நமக்கு உதாரணமாக திகழ்வது.

தான் அடுத்தவர்களுக்கு - அது திரைப்படத்திலாகட்டும் நிஜ வாழகையிலாகட்டும் - கூறுகின்ற அறிவுரைகளை தான் முதலில் பின்பற்றுகிறோமா என்று பார்த்துவிட்டு தான் அவர் அறிவுரையே கூறுவார். ஊருக்கு மட்டும் உபதேசம் என்று அவர் என்றுமே இருந்ததில்லை.

தனது உடலை பேணிக்காப்பதில், குடும்ப நலன், பணியாளர் நலன், தம்மில் எளியோரிடம் அவர் நடந்துகொள்ளும் முறை, அரசாள்பவர்களுடன் அவர் கடைப்பிடிக்கும் தூரம் இப்படி பல விஷயங்களில் நாம் அவரிடம் அனேக விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.

செல் பேசா விந்தை மனிதர்

இன்றைய காலகட்டங்களில், செல் போன் எவ்வாளவு முக்கியமான விஷயம்? ஆனால் சூப்பர் ஸ்டாரோ செல்போனை உபயோகித்து நாம் பார்த்தது மிக மிக அரிதாக தான். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, கையில் லேட்டஸ்ட் செல்போனே ஒன்றை வைத்துக்கொண்டு போஸ் தருவதுதான் கோலிவுட்டின் பாஷன். செல்போன் என்பது தேவை என்ற நிலை தாண்டி இப்போது நம்மை அது அடிமைபடுத்திவிட்டது என்றே கூறலாம். (இரவில் படுக்கும்போது செல்லை சுவிட்ச் ஆப் செய்பவரகளையே நான் அதிசயமகாத்தான் பார்க்கிறேன்...!!)

இப்படிப் பட்ட கால கட்டங்களில், "கூவும் செல்போனின் நச்சரிப்பை அனைத்து கொஞ்சம் சில்வண்டின் சத்தத்தை கேட்போம்" என்று பாடி, அதன்படி அவர் தவறாது நடந்து கொள்வதும் நமக்கு தெரியும்.

உணவுபழக்கங்கள், உடற் பயிற்சிகள்

ஆரோக்கியமான உணவுபழக்கங்களை கூட அவர்களுக்கு கூட அவர் எத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தான் பின்பற்றி பாடம் போதித்துகொண்டிருக்கிறார்.

இயந்திரமயமாக வாழ்க்கை மாறிவிட்ட இன்றைய சூழ்நிலைகளில் சத்து மிக்க இயற்க்கை உணவுகளான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நாம் அறவே தவிர்த்துவிட்ட நிலையில் சூப்பர் ஸ்டாரின் டயட்டில் முக்கிய இடம் பிடிப்பது காய்கறிகள், பழ வகைகளே. (சிவாஜி இருநூறாவது நாள் விழாவில், விவேக்கின் உரை ஞாபகமிருக்கிறதா?)

அது மட்டுமா தினமும் உடற்பயிற்சி செய்கிறார். நீச்சல் அடித்தல், ஸ்கிப்பிங் ஆடுதல் உள்ளிட்ட பல எளிய ஆனால் பயன் தரக்கூடிய உடற்பயிசிகளை செய்கிறார். (தளபதி தினேஷ் அண்மையில் ஒரு தொலைகாட்சி பேட்டியில் இது குறித்து கூறியிருந்தார்.)

சமீபத்தில் நடந்த ரஜினியின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டில் கூட கேளம்பாக்கம் பண்ணையில் சூப்பர் ஸ்டாருடன் சிறிது நேரம் செலவிடும் வாய்ப்பை பெற்ற ஒருவர், சூப்பர் ஸ்டாரின் உணவு முறைகள் பற்றியும் அவர் செய்யும் உடற்பயிற்சிகள் பற்றியும் வியந்து பேசியிருந்தார்.)

பொறுப்பு மிக்க நடிகர்

தூர்தர்சன் பேட்டியிலேயே அவர் இது குறித்து தெளிவாக கூறியதும் அதன் படியே அவரது வாரிசுகள் அவரவர் விருப்பப்படியே தங்கள் துறையை தேர்ந்தெடுத்துக்கொள்ள அவர் அனுமதித்ததும் தெரிந்ததே. தங்கள் விருப்பங்களை வாரிசுகள் மீது திணிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் தனித்து நிற்கிறார். அது மட்டுமா, தனது மகளின் விருப்பப்படியே அவரது வாழ்க்கை துணியை தேர்ந்தெடுக்க அனுமதித்ததும் அனைவரும் கவனிக்க வேண்டிய, பாராட்ட வேண்டிய விஷயம்.

படப்பிடிப்பு தளங்களில் பொறுப்பு மிக்க நடிகராக அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்று நடிகை நயன்தாரா கூறியதை நாம் பார்த்தோம்.

படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவது, அதற்க்கு முழு ஒத்துழைப்பு தருவது, எந்த வித பந்தாவும் இன்றி யூனிட் ஆட்களிடம் பழகுவது, அனைவரையும் மரியாதையுடன் நடத்துவது... இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

பொறுப்பு மிக்க குடிமகன்

பொறுப்பு மிக்க குடிமகனாக தமது வருமான வரியை தவறாது கட்டும் முதல் குடிமகன் அவர். (1998 இல் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் வரி கட்டுவது தொடர்பான குற்றச்சாட்டுக்களை மறுத்த ரஜினி, தாம் தமது வருமான வரியை தவாராது கட்டுவதாகவும், வேண்டுமென்றால் ஜெயலலிதா ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்.) பாபா தயாரித்த போது தாமே முன்வந்து முன்கூட்டியே வரி கட்டி அனைவரையும் ரஜினி வியப்பிலாழ்த்தியது குறப்பிடத்தக்கது.

ஒதுங்கியிருக்கலாம் உதறியிருக்கலாம் உறங்கிவிடக்கூடாது

எந்த விஷயத்திலும் பற்றிலாமால் அவர் ஒதுங்கியிருப்பார், உதறியிருப்பார். ஆனால் ஒரு போதும் உறங்குவதில்லை. உலக விஷயங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் 'encyclopaedia' அவர். ஆனால் தமக்கு இத்துணை விஷயங்கள் தெரியும் என்று அவர் காண்பித்துகொள்ளவே மாட்டார். நிறைகுடம் என்றுமே தளும்பாது அல்லவா?

புத்தகப் பிரியர்

கூடுமானவரை மார்க்கெட்டில் வெளியாகும் தரமான நூல்களை அவர் படித்துவிடுவார். (அமெரிக்காவில் புரட்சி ஏற்படுத்தியுள்ள ஒபாமாவை பற்றிய நூலை அவர் சமீபத்தில் படித்திருக்கவேண்டும் என்பது என் கணிப்பு). நல்ல நூல்களை படிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் குறைந்துவருவது குறித்து ஒரு பத்திரிகை பேட்டியில் தமது கவலையை வெளிப்படுத்தியிருப்பார். (நண்பர் ஒருவர் அளித்த நூலை நான் ஆறு மாதமாக படித்துகொண்டிருக்கிறேன்!!)

அவர் தினமும் தியானம் செய்வது பற்றி நான் கூற வேண்டியதேயில்லை. நீங்கள் அனைவரும் அறிந்ததே.

"மூன்று மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன், ஆனால் அந்த மூன்று மணி நேரமும் அவர் அடுத்தவர்கள் பற்றி என்னிடம் புறம் பேசவேயில்லை" என்று கவிஞர் வைரமுத்து சிவாஜி வெள்ளி விழாவில் கூறியது நினைவிருக்கிறதா? நம்மால் இது சாத்தியமா என்று சிறிது எண்ணிப் பார்த்தால் தெரியும் அது எவ்வளவு உயரிய பழக்கம் என்று...

இறுதியாக அவரது இறை பக்தி. தன்னையே இறைவனிடம் ஒப்படைக்கும் பக்குவம் அவரிடம் இருக்கிறது. அதனால் தான் எத்துனை பெரிய சோதனைகளும் அவருக்கு சூரியன் கண்ட பனித்துளி போல விலகிவிடுகின்றன. சந்திரமுக்சி வெள்ளிவிழாவில் இது குறித்து அவர் விரிவாக கூறியிருப்பார்.

சூப்பர் ஸ்டாரின் நற்பண்புகளை இப்படி அடுக்கிகொண்டே போகலாம். அதற்க்கு ஒரு பதிவு போதாது.

நீங்கள் இந்த பதிவில் காணும் புகைப்படம், அருணாசலம் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாடிய பொது எடுக்கப்பட்டது (12/12/1996).

அருணாசலம் யூனிட் அவருக்காக ஸ்பெஷலாக வரவழைத்த அந்த கேக்கில் காணப்பட்ட வாசகம் என்ன தெரியுமா?

"To the Man, who is an Institution by Himself"

எவ்வளவு பொருத்தமான வரிகள்....!!!!

[END]