Sunday, August 3, 2008

பத்திரிகை சுதந்திரமும் கசாப்பு கடையும்...

குசேலன் படம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் இந்த தருணத்தில், அந்த வெற்றியை நாம் அனுபவிக்க இயலாமல் ஏதோ ஒரு விதமான சோகத்தில் ஆழ்ந்திருக்கிறோம். சொல்ல வார்த்தைகளற்ற ஒரு ஊமையின் சோகம் அது.

படம் குறித்து செய்திகள் சேகரிக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் ரிலீசுக்கு முந்தைய நாள் மாலை நான் அரங்குகளுக்கு விசிட் அடிக்க சென்று கொண்டிருந்தேன். இடி போல் வந்து இறங்கியது அந்த செய்தி. "தலைவர் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக சேனல்களில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது"

அந்த ஒரு கணம்

ஒரு நிமிடம் என் இதயமே நின்று விட்டது போன்ற உணர்வு. (தனது சொந்த நாட்டில் உள்ள ஒரு மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுவதால் அல்ல. அதற்க்கு இந்த காட்டுமிரான்டிகள் கூட்டத்தில் எழப்போகும் எதிர்ப்பை நினைத்து.)

இருப்பினும் தலைவன் மேல் உள்ள நம்பிக்கையில் என்ன நடந்திருக்கும் என்று தெரியாமல், ஆராயாமல் நாம் எந்த வித முடிவுக்கும் வரவேண்டாம் என்று கருதி பயணத்தை தொடர்ந்தேன். இருப்பினும் கவரேஜ் செய்யும் மனநிலை எனக்கு தொலைந்து போயிருந்தது. கவரேஜ் பயணத்தை ரத்து செய்து விட்டு ஓரிடத்தில் போய் உட்கார்ந்தேன். அதற்குள் எனக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வரத் துவங்கின. யாரிடமும் பேசும் சக்தி எனக்கிருக்கவில்லை.

இருப்பினும் முன்னேற்றங்களையும் நிகழ்வுகளையும் நண்பர்கள் வாயிலாக கேட்டுகொண்டிருந்தேன். என்ன நடந்திருக்கும், எவ்வாறு மீடியா விளையாடியிருக்கும் என்று புரிந்தது. பதிவில் காத்திருப்பவர்களுக்கு என்ன சொல்வது என்று ஹோம் வொர்க் செய்துகொண்டேன்.

பிறகு நடந்தது உங்களுக்கு தெரியும்.

அடப்பாவிகளா...

இதனிடையே ஏதோ ஒருவித ஈர்ப்பால் படத்தை மூன்று முறை பார்த்துவிட்டேன். இன்று (ஞாயிறு ) காலை பேப்பர் வாங்க கடைக்கு சென்றால், அங்கிருக்கும் நாளிதழ்களின் போஸ்டரை பார்த்து மனம் பதறியது.

பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் கசாப்பு கடை அல்லவா நடக்குது இங்கே...இவர்களை தட்டி கேட்க யார் உண்டு?

தினமலர்: ரஜினி மீண்டும் குழப்பம்

தினமணி: 'வருத்தத்துக்கு' ரஜினி மீண்டும் வருத்தம்

தினகரன்: 'மன்னிப்பு' ரஜினி மீண்டும் விளக்கம்.

ஆறுதலாக அமைந்தது தினத்தந்தி மட்டுமே. (இணைக்கப்பட்ட படத்தை காண்க)

நக்கீரன்...தயவு செய்து பத்திரிக்கையின் பெயரை மாற்றவும்...

ஆனால், நக்கீரன் போஸ்டரை பார்த்து துடித்து போனேன். முடிந்து போன பிரச்சனையை கிளறியிருந்தார்கள். "ரஜினி மன்னிப்பு கேட்டது சரியா? கொந்தளிக்கும் தமிழகம்"

அடப்பாவிகளா ... ரஜினியின் உப்பை தின்று வளர்ந்து இன்று அவரையே கூறு போடுகிறீர்களே? உங்களுக்கு மன்னிப்பு உண்டா? உங்களுக்கு 'நக்கீரன்' என்ற அந்த புனிதனின் பெயர் எதற்கு?

வெகுமதி...?

மிகவும் வலித்தது...ரஜினியின் ரசிகனாக இருப்பதற்கு கிடைக்கும் வெகுமதி?

இது போததென்று வலைத்தளங்களிலும் இணைய பக்கங்களிலும் ரஜினியை கடித்து குதறி கொண்டிருக்கிறார்கள். நிறைய வலைத்தளங்களின் வக்கிர புத்தி இப்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.

(sify.com எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. படம் பற்றிய விமர்சனத்தினால் அல்ல. தலைவரின் வருத்தம் பற்றிய அதில் வரும் அரைவேக்காட்டுதனமான செய்திகளால்)

எதிர்ப்பாளர்களை விடுங்கள்...அவர்கள் எந்த காலத்திலும் ரஜினியை ஏற்று கொள்ளபோவது இல்லை. ஆனால் அப்பாவி பொதுமக்கள்? அவர்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றும்? நினைக்கவே வலித்தது...நமக்கெல்லாம் ரஜினியின் பேச்சை ஆராயவும், அதில் தவறு எதுவும் இல்லை தலைவனின் பெருந்தன்மை மட்டுமே இருக்கிறது என்று புரிந்துகொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. தெரியும். ஆனால் மக்களுக்கு? அவர்களுக்கு அன்றாடவாழ்க்கையுடன் போராடுவதே பெரும்பாடு. போகிற போக்கில் கடைகளில் தொங்குகின்ற போஸ்டர்களை மட்டுமே பார்த்து நாட்டு நடப்பை தெரிந்து கொள்வோர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் மேற்கொண்ட விளக்கத்தை புரிந்துகொள்ள நேரம் எது?

விதியின் விளையாட்டு

உண்ணா விரதங்களிலும் பல்வேறு காலகட்டங்களிலும் அவர் ஈட்டிய தமிழ் ஆதரவு பெயர் ஒரே நொடியில் விதியின் விளையாட்டால் தரை மட்டமாகிவிட்டது.

இதுவரை வந்த சோதனைகளில் தனது தமிழ் பற்றை நிரூபிக்க அவருக்கு வேறு வழிகள் இருந்தன. ஆனால் இனி? கண்ணை விற்று அல்ல தன்னையே விற்றல்லவா சித்திரம் வாங்கியிருக்கிறான் தலைவன் (அமைதியின் பொருட்டு). எதை கொடுத்து மீட்பது?

தீக்காயத்தில் ....

தீக்காயத்தில்
தேள் அல்ல தேள் கூட்டமே அல்லவா கொட்டுகிறது இன்று...

அன்று கௌரவர் சபை நடுவில் பாஞ்சாலியின் துகில் உரியப்படும் போது மானம் காக்க கண்ணன் வந்தான்.

ஆனால் இன்று மக்கள் மன்றத்தில் தலைவனின் துகில் உரியப்படும்போது கண்ணன் வரவில்லை... என் போன்ற ரசிகர்களின் கண்ணீர் மட்டுமே வருகிறது...

இது இறைவனுக்கு நாங்கள் வைக்கும் சோதனை...

இறைவா, இது தலைவனுக்கு ஏற்பட்ட சோதனை அல்ல....உனக்கு நாங்கள் வைக்கும் சோதனை...நீ இருப்பது உண்மையானால் தலைவன் குற்றமற்றவன் , அவன் ஒரு மாசறு மாணிக்கம் என்று இந்த உலகம் நிரந்தரமாக நம்ப வேண்டும். பழி நீங்க வேண்டும்...இந்த கணத்திலும் இரக்கமற்று நடந்துகொண்ட துரோகிகளும் புல்லுருவிகளும் தக்க பாடம் பெற வேண்டும்.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை? கண்ணீரால் அன்றோ காத்தோம். கருக விடலாமா? (நன்றி: சுப்ரமணிய பாரதி)

எனது மன பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் - பணிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு. இதற்க்கு மேல் என்னால் எழுத முடியவில்லை...மன்னிக்கவும்....

(என்னை ஏதோ தலைவனின் வெறி பிடித்த ரசிகன் என்று என்ன வேண்டாம். நானும் ஒரு சராசரி ரசிகன் தான். என் நண்பர்களிடம் தலைவனை பல முறை விமர்சித்திருக்கிறேன். குற்றம் கண்டுபிடித்திருக்கிறேன். ஆனால் அது (எனக்கு) எங்களுக்கு மட்டுமே உள்ள உரிமை.)

குறிப்பு: என் தலைவனுக்கு மேலாக என் பணியையும், அதற்கும் மேலாக என் குடும்பத்தாரையும் அதற்கும் மேலாக என் தாய்த்திரு நாட்டையும் நான் நேசிக்கிறேன்.

ஜெய் ஹிந்த்...

இது தொடர்பான முந்தைய பதிவுகள்....

நடந்தது என்ன?
http://onlysuperstar.blogspot.com/2008/08/blog-post.html

குதிரை குழிக்குள் விழுந்தால்....
http://onlysuperstar.blogspot.com/2008/08/blog-post_01.html